சத்தியக் கூற்றுகள் / அற்றோனித் தத்துவங்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- இலங்கைப் பிரஜை அல்லது இலங்கை பெருநிறுவனப் பிரஜை யொருவரினால் கையொப்பமிடப்பட்டு, பிரகடனம் செய்யப்படும் சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவம் மாத்திரமே சான்றுப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும். இலங்கை பெருநிறுவனப் பிரஜை தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக, துணை ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். (உதா: கம்பனிகள் செயலாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட படிவ இல. 20)
- சட்டத்தரணி ஒருவரின் முன்னிலையில் சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவம் விளம்பல் செய்யப்படுமாயின் உயர் நீதிமன்றத்தின் பதிவாளரினால் அது சான்றுப்படுத்தப்படல் வேண்டும். சத்தியக் கூற்று சமாதான நீதிவான் ஒருவரினால் கையொப்பமிடப்படுமாயின் நீதி அமைச்சின் சமாதான நீதிவான் கிளையின் அதிகாரம் பெற்ற அலுவலரினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
- சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவத்தில் குறிப்பிடப்படும் தகவல்களை உறுதிசெய்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பித்தல் வேண்டும். சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவத்தில் குறிப்பிடப்படும் தகவல்களை உறுதிசெய்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்காத சந்தர்ப்பத்தில், குறித்த சத்தியக் கூற்று அல்லது அற்றோனித் தத்துவம் சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள், மரணச் சான்றிதழ்கள், கடவுச்சீட்டுகள், சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் போன்ற அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள ஆவணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திருத்தங்களை சான்றொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற சத்தியக் கூற்றுகள், மூலப்பிரதி ஆவணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்படுகின்ற அதிகாரியினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே சான்றுறுதிப்படுத்தப்படும்.
- வெளிநாட்டில் வசிக்கின்ற எவரேனும் இலங்கையர் கொன்சியூலர் சட்டத்தின் கீழ் இலங்கை தூதரகத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் ஒருவர் முன்னிலையில் சத்தியக் கூற்று ஒன்றினை அல்லது அற்றோனித் தத்துவம் ஒன்றினை விளம்பலாம் அல்லது கையொப்பமிடலாம்.

